Tamilnadu Rain | விடாது கொட்டும் கனமழை… தமிழகத்தின் காலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

By Narendran SFirst Published Nov 26, 2021, 2:49 PM IST
Highlights

#TamilnaduRain | தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதிகனமழை 3 இடங்களிலும் கன முதல் மிக கனமழை 4 இடங்களிலும் 70 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பிற பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். தொடர்மழை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.

இன்று மற்றும் நாளை குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குமரிக்கடல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 1 முதம் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் 58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 34 செ.மீ. இது இயல்பை விட 70 சதவிகிதம் அதிகம். சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பதிவான மழையின் அளவு 98 செ.மீ. இயல்பு அளவு 59 செ.மீ. இது இயல்பை விட 67 சதவிகிதம் அதிகமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளின் சராசரியை பொறுத்தவரையில் தமிழக மற்றும் புதுவையில் இன்று தான் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

click me!