ரெட் அலர்ட்டால் தமிழகத்தில் உச்சக்கட்ட உஷார்... கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்த அரசு.!

By Asianet TamilFirst Published Nov 9, 2021, 8:32 PM IST
Highlights

அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கன மழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு 9 மாவட்டங்களுக்கு கல்வி நிலையங்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிடமடைந்துள்ளது. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நாளில் 25 செ.மீ. அளவுக்கு இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால், சென்னை நகரமே வெள்ளக் காடாயினது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதேபோல தமிழகத்தின் மத்திய, தென் மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மீண்டும் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதேபோல வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் சிலவற்றுக்கும் ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை இந்த மாவட்டங்களின் நிர்வாகம் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வந்தது. இதற்கிடையே ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசே விடுமுறையை அறிவித்துள்ளது. இதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு  10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருச்சி(பள்ளிகள் மட்டும்), விருதுநகர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை ஒரு நாளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!