
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 12 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒருசில முறை லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: 2018 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு முன்னறிவுப்பு குறித்து இந்திய வானிலை துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடையாத நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்கவில்லை.
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12 சதவிகிதம் அதிகமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வலிமண்டலத்தில், இலங்கை முதல் வடகிழக்கு கர்நாடகம் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 நேரத்தில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் 2 தினங்களில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தன் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். குமரிக்கடல், தென்தமிழ் கடற்பகுதி, தெற்கு கேரளா, மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்த பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள், செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில முறை மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலைமைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.