புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
‛நடா' புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் முடுக்கி விட்டுள்ளனர்.
*இதுதொடர்பாக, சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:*
‛நடா' புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் முன்னெரிக்கை நடவடிக்கைகள் துரித கதியில் எடுக்கப்பட்டு வருகின்றன.
மழைநீர் தேங்கும் தாழ்வான 35 பகுதிகள் கண்டறியபட்டுள்ளன. அப்பகுதியில் 10 படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 108 படகுகள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு குழு வீதம் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
சென்னையில் மக்கள் தங்குவதற்காக 176 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. 4 சமையல் கூடங்கள் அமைக்கப்படும்.குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் குளோரின் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மின்சார வாரியத்திற்கு அறிவிறுத்தி உள்ளோம். மின் தடை, மின்கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு உதவியாக 18 உயர் மின் கோபுர விளக்குகள் தயார் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் உதவிக்காக கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 044-25619206, 25619511, 25367823, 25387570, 25384965 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
94454 77207, 01, 03, 05, 06 ஆகிய வாட்ஸ் அப் உதவி எண்களிலும் உதவி கோரலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*பொதுமக்களுக்கு வருவாய்துறை அறிவுறுத்தல்*
நடாபுயல் எச்சரிக்கையை யொட்டி பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் வருவாய்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பொதுமக்கள் ரேடியோ, தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே மற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும். மின் வயர் அறுந்து கிடக்கும் பகுதிகளில் கவனமாக நடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.