
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நேற்று காலை மேற்கு வங்காள - வங்கதேச கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வங்காளம் - வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும், கேபுபாராவிற்கும் (வங்கதேசம்) இடையே நேற்று மதியம் கரையை கடந்தது.
கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எந்தெந்த பகுதிகளில் மழை
அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பரவலாக மழை
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு, மெரினா, பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.