வேலூர்
வேலூரில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ந்த காற்றை மக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலையில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
பகலில் கொளுத்தும் வெயில், மாலையில் மழை என இரு வேறு காலநிலைகளை வேலூர் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
அதன்படி, நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மழையின் வேகம் குறைந்தது. எனினும் இரவு 12.30 மணி வரை நல்ல மழை பெய்தது. இதனால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. குளிர்ந்த காற்றை அனுபவித்து மக்களும் இன்பத்தில் ஆழ்ந்தனர்.
வேலூரில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு:
ஆலங்காயம் 34.8 மில்லி மீட்டர், மேலாலத்தூர் 34.6 மில்லி மீட்டர், அரக்கோணம் 25.6 மில்லி மீட்டர், ஆற்காடு 21.4 மில்லி மீட்டர், சோளிங்கர் 15 மில்லி மீட்டர், குடியாத்தம் 14 மில்லி மீட்டர், காவேரிப்பாக்கம் 9.2 மில்லி மீட்டர், வாணியம்பாடி 9 மில்லி மீட்டர், ஆம்பூர் 7.2 மில்லி மீட்டர், வேலூர் 7 மில்லி மீட்டர்.