சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. நேற்று பகல் பொழுதில் மழை ஓய்ந்திருந்த நிலையில், இரவு 9 மணிக்கு மேல் கொட்டத் தொடங்கியது.
சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால், மீண்டும் சென்னைவாசிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். ஏற்கனவே பெய்த மழையால வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை, இந்த மழையால் மீண்டும் தண்ணீரில் தத்தளித்தது.
சென்னை அடையாறு , மீனம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், போரூர், தரமணி, அசோக்நகர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, ராயப்படே்டை, பட்டினம்பாக்கம், நுங்கம் பாக்கம், பிராட்வே, மதுராவயல்,கொளத்தூர் ,பல்லாவரம், நங்கநல்லூர், வேளச்சேரி, அம்பத்தூர் ,கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
நள்ளிரவுக்கு மேல் சற்று ஓய்ந்த மழை, பின்னர் தொடர்ந்து விட்டு,விட்டு தற்போது வரை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி , ஆண்டார்குப்பம் , தச்சூர், மீஞ்சூர், பழவேற்காடுஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழைபெய்தது.
நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, வேதாரண்யம், சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்தது
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு , மாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
இதே போன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.