கன்னியாகுமரி வந்துள்ள ராகுல் காந்தியிடம், மீனவர் ஒருவரின் மனைவி கையைப் பிடித்துக் கொண்டு கதறிய காட்சி, சுற்றியிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதன முறையாக தமிழகம் வருகை தந்துள்ளார். குமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியில் மீனவ மக்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விஜயதாரணி, கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மக்களின் கோரிக்கைகளை ராகுல் காந்தியிடம் திருநாவுக்கரசர் மொழிபெயர்த்தார்.
மக்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய ராகுல் காந்தி, நான் ஏற்கனவே இங்கு வரவேண்டும் என நினைத்தேன். குஜராத் தேர்தல் காரணமாக வர இயலவில்லை. அதனால்தான் தற்போது தாமதமாக வர நேரிட்டது. ஓகி புயலால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பும் பாதிப்பும் மிகக்கடுமையானது. மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அனைத்து வகையிலும் காங்கிரஸ் உதவும் என ராகுல் காந்தி உறுதியளித்தார்.
குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் உள்ள மக்களோடு மக்களாக அமர்ந்து, அவர்களின் குறைகளைக் கேட்டார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியைப் பார்க்க வந்த மக்கள், வெயிலில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்த ராகுல் காந்தி, அவர்களுடன் அமர்ந்து கொண்டார். அப்போது, மீனவர்களின் குடும்பத்தினர், ராகுல் காந்தியிடம் கண்ணீர் மல்க கூறினர். மாயமான மீனவர்களை மீட்டுத்தரக் கோரியும் மனுவும் கொடுத்தனர்.
ராகுல் காந்தியிடம் திடீரென வந்த, கடலில் மாயமான மீனவர் ஒருவரின் மனைவி அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, கணவரை மீட்டுத் தரும்படி கதறினார். இந்த சம்பவம் சுற்றியிருந்தவர்களைக் கண்கலங்க செய்தது.