வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிசிடிவி, இரட்டை பூட்டு கட்டாயம் .. அதிரடி உத்தரவு போட்ட தேர்வுத்துறை..

By Thanalakshmi VFirst Published Apr 7, 2022, 12:01 PM IST
Highlights

10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் கட்டுப்பாடு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
 

10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் கட்டுப்பாடு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் இறுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் தற்போது பிளஸ்1, பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்விலும் 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் தேர்விற்கு முன்னதாக கசிந்த சம்பவம் பரபரப்பான நிலையில் மீண்டும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 ஆம் வகுப்பு இராண்டாம் திருப்புதல் தேர்வில் கணித தேர்விற்கான வினாத்தாள் கசிந்தது.

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தற்போது வினாத்தாள் வெளியாகியிருப்பது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து, புதிய வினாத்தாளை வைத்து 12 ஆம் வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது. மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார். மேலும் திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

 இதனிடையே தற்போது 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் கட்டுப்பாடு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறையில், வினாத்தாள் கட்டுப்பாடு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, அது செயல்பாட்டில் இருக்க வேண்டும். தொடர்ந்து காவலர் பணியில் இருக்க வேண்டும். மேலும் இரட்டை பூட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும்.

பொதுத்தேர்வு மையங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்க கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்களே தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!