நெடுவாசலில் நடக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பதை முறையான அறிவிப்பை வெளியிடுங்கள் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ந் தேதி நெடுவாசல் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்கலில் மாணவ மாணவியர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே மாணவ மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. ஆனால் போராட்டகாரர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
இதனிடையே முதலமைச்சர் பழனிச்சாமியை நெடுவாசல் போராட்ட குழுவினர் ஏற்கனவே சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.
ஆனால் முதலமைச்சர் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றதால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நெடுவாசல் போராட்டக்குழுவினர், முதல்வரின் பதில் திருப்திகரமாக இருந்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் ஆலோசனை செய்த பின்னர், போராட்டத்தை கைவிடுவதா? தொடர்வதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும்,தெரிவித்தனர்.
ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதியை முறையான சட்டமாக இயற்ற வேண்டும் எனவும், முறைப்படி அறிவிப்பு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என நெடுவாசல் பொதுமக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.