கொலை செய்து கடித்து வைக்கும் சைக்கோ கொடூரன்… ஆந்திர மாநில போலீசிடம் சிக்கினான்!!

First Published Mar 21, 2018, 9:33 AM IST
Highlights
psyco killer arrested near velore by andra police


பெண்களை கொலை செய்து உடல் முழுவதும் கடித்து காயப்படுத்தி வந்த  தமிழகத்தை சேர்ந்த கொடூர கொலையாளியை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். முனுசாமி என்ற இந்த சைக்கோ கொலைகாரன் இதுவரை  7க்கும்  மேற்பட்டோரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தமிழக- ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த வி.கே.ஆர்.புரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தவர் ரத்தினம்மாள் என்ற மூதாட்டி கடந்த மாதம் 25ம் தேதி இரவு அவரது வீட்டில் தலையில் கல்லால் அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக  கிடந்தார்.

மூதாட்டி ரத்தினம்மாளின் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் மர்ம நபர் பல்லால் கடித்து வைத்திருந்த காயங்கள் காணப்பட்டன. கொலை செய்யப்பட்ட பின்னர் கொலையாளி ரத்தினம்மாளை பல்லால் கடித்து காயப்படுத்தி கொடூரமாக நடந்திருப்பது கண்டு ஆந்திர காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

இதே போல் கடந்த 9ம் தேதி சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே அப்பல்ராஜா கண்டிகை கிராமத்தில் தனியாக இருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணும் கொலைசெய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரது உடலிலும் பல இடங்களில் பல்லால் கடித்து கொடூரமாக காயப்படுத்தி இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இந்த இரண்டு கொலைகளும் ஒரே மாதிரியாக நடந்திருப்பதால் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இதில் இரண்டாவது கொலையில் பதிவான சந்தேகத்துக்கிடமான கைரேகை வேலூரை சேர்ந்த சீரியல் கொலையாளியான வாலாஜாபாத் அடுத்த மாதாங்கல் கிராமத்தை சேர்ந்த முனுசாமியின் கைரேகையுடன் ஒத்துப்போனது.

இதையடுத்து தமிழக குற்றபுலனாய்வுதுறையின் உதவியுடன் முனுசாமி  தொடர்பான  தகவல்களை திரட்டி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

இதுவரை 7 கொலை,நான்கு கொலை முயற்சிகள், 30 க்கும் மேற்பட்ட வழிப்பறிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முனுசாமியை, வாலாஜாபாத்தில் வைத்து, சித்தூர் போலீசார் கைது செய்தனர்.

திருமணம் செய்து கொள்ளாத முனுசாமி தனது 18 வயது முதல் திருட்டு வழிப்பறி வழக்குகளில் ஈடுப்பட்டு போலீசில் சிக்கி சிறைக்கு செல்வதையும், வெளியே வந்தவுடன் மீண்டும் அதே தவறை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

2001 ஆண்டு ஒரு கொலை, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்ட முனுசாமி, வெளியே வந்து தொடர் கொலைகள் செய்து சீரியல் கொலையாளியாக மாறியதாக  தெரிகிறது.

முனுசாமியால்  ஆந்திர மாநில எல்லையோரத்தில் உள்ள கிராம மக்கள் கடந்த சில வாரங்களாக பீதியில்  இருந்து வந்தனர். தற்போது முனுசாமி கைது செய்யப்பட்ட அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

click me!