
நாகப்பட்டினம்
மத்திய அரசுக்கும், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டினத்தில் கல்லூரி 500–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த செயலுக்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாள்களாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதையடுத்து சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது போல நெடுவாசல் கிராமமக்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தவேண்டும் என சமூக வலைதளங்களில் மாணவர்களுக்கு அழைப்புகள் விடப்பட்டு வருகிறது.
இதற்கு செவிசாய்த்து பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நாகை புத்தூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவ – மாணவிகள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தலைமைத் தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ், மாவட்ட தலைவர் ஜோதிபாஸ் ஆகியோர் பேசினர்.
இதில் கல்லூரி நிர்வாகிகள் விஜயேந்திரன், சிவநேசன், மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதர் உள்பட கல்லூரி மாணவ–மாணவிகள் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் “மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்” என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.