
மாட்டிறைச்சி விவகாரத்தில் மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அப்புறபடுத்த முடியாமல் சிறிது சிறிதாக கைது செய்து போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது எனவும், மாட்டிறைச்சி உண்ணக்கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் மாட்டிறைச்சி உண்ணும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர் சூரஜ்குமார் என்பவர், ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சிலர், அவரை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சக மாணவர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உருதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அதன்படி மாணவன் சூரஜ்குமாரை தாக்கிய சம்பவம் தொடர்பாக, ஐஐடி மாணவர்கள் 8 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சூரஜ் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., மாணவர் மணீஷ் குமார் சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில், சூரஜ் உள்ளிட்ட 2 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டதால் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் மாணவர்கள் அமைப்பினர் ஐ.ஐ.டியின் இரு வாசல் பகுதியிலும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை அப்புறபடுத்த கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால் மாணவர்கள் ஒத்துழைப்பு தராததால் போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.