
கடலூர்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் கடலூர், நாகப்பட்டினம் மற்றும் பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 27–ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் பெய்த பரவலான மழையால் கடலோர மாவட்டங்கள் பலத்த மழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் உணர்ந்தன.
பின்னர் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன்படி கடந்த சில நாள்களாக மழை அளவு குறைந்திருந்தது. இருந்தாலும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிருமாக இருக்கிறது.
இந்த நிலையில், மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு 300 கிலோ மீட்டர் தெற்கே மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைக் கொண்டு உள்ளது.
இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் கடலூர், நாகப்பட்டினம் மற்றும் பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.