
திரையரங்கில் விழாக்கோலம்
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. இதற்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர். பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ள திரையரங்கம் முன்பு கட் அவுட் வைத்து விழாவாக கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் ஒரு வாரத்திற்கு பீஸ்ட் புக்கிங் முடிந்துள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு கள்ளத்தனமாக பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் விற்க்கப்பட்டு வருகிறது.
கரூரில் பீஸ்ட் வெளியாவதில் சிக்கல்
இந்த நிலையில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை கரூர் மாவட்டத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு திரையரங்குகளில் 3 திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பத்திரிக்கைகளிலும் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3 திரையரங்குகளிலும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் கவலை
விநியோகஸ்தர்கள் கொடுத்துள்ள ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாத காரணத்தால் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையென திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கரூர் மாநகரங்களில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகவில்லையென்றும் உள்மாவட்டங்களில் இரண்டு திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் கரூர் மாவட்டத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகத காரணத்தால் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.