செல்லாத நோட்டு பிரச்சனையால், பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 3,028 பால் கறவைதாரர்களுக்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யபட்டது.
செய்யாறில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கடந்த 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த சங்கத்தில் 3,028-க்கும் மேற்பட்ட பால் கறவைதாரர்கள் மூலம் நாள்தோறும் சராசரியாக 14 ஆயிரம் லிட்டர் பால் பெறப்படுகிறது. 71 பால் கறவை மையங்கள் (யாட்) மூலம் பெறப்படும் பாலில் 20 சதவீத பால் செய்யாறு நகர் முழுவதும் காலை, மாலை வேளைகளில் விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள 80 சதவீத பால் அனக்காவூரில் உள்ள ஆவின் பால் நிலையத்துக்கு வழங்கப்படுகிறது.
பால் விநியோகம் செய்யும் கறவைதாரர்களில் கிராமப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு வெள்ளிக்கிழமையும், நகர்ப் பகுதியில் உள்ளவர்களுக்கு சனிக்கிழமையும் வாரந்தோறும் சுமார் ரூ.25 இலட்சம் வரை பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் ரூ.500,1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பு காரணமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் கணக்கு வைத்திருக்கும் செய்யாறு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், அதன் உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் கடந்த ஒரு மாத காலமாக சிரமப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னை பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு பால் பணபட்டுவாடா எளிதாக செய்யும் வகையில், அவர்களுக்கு வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய வலியுறுத்தப்பட்டது.
மேலும், பால் உற்பத்தியாளர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, செய்யாறு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் சங்கத் தலைவர் ஏ.அருணகிரி தலைமையில், செயலர் கிரிசன் முன்னிலையில், பாரத ஸ்டேட் வங்கி செய்யாறு கிளை மூலம் பாரத பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ், சங்க உறுப்பினர்களுக்கு வங்கிக் கணக்கு தொடக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் சுமார் 150 பால் கறவைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு தொடப்பட்டது.