மக்களே !! மழை காலங்களில் இதை செய்யாதீர்கள்.. மின் வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை..

By Thanalakshmi VFirst Published Oct 26, 2022, 10:49 AM IST
Highlights

வட கிழக்கு பருவமழையையொட்டி மழை காலங்களில் மின் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பது குறித்து மின்வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,” தமிழகத்தில்‌ தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்‌
தென்மாவட்டங்களில்‌ ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்‌ மழைக்காலத்தில்‌ மின்‌ விபத்துகள்‌ ஏற்படாமல்‌ தடுக்க காற்று மற்றும்‌ மழைக்காலங்களில்‌ மின்மாற்றிகள்‌, மின்கம்பங்கள்‌, மின்கம்பிகள்‌, மின்பகிர்வு பெட்டிகள்‌, ஸ்டே கம்பிகள்‌ அருகில்‌ செல்ல வேண்டாம்‌. 

மின்மாற்றிகள்‌, மின்கம்பங்கள்‌, மின்பகிர்வு பெட்டிகள்‌ அருகே தண்ணீர்‌ தேங்கியிருந்தால்‌ அதன்‌ அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல்‌ தெரிவிக்க வேண்டும்‌. மின்கம்பிகள்‌ அறுந்து விழுந்தால்‌ அதன்‌ அருகில்‌ செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல்‌ தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள்‌ வரும்‌ வரை வேறு யாரேனும்‌ மின்கம்பிகளை தொடாமல்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.

மேலும் படிக்க:சென்னை மக்களே உஷார்.. இன்று முதல் புதிய அபராதம் தொகை அமலுக்கு வந்தது..!

இடி மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின்‌ அடியிலோ, மின்கம்பங்கள்‌, மின்கம்பிகள்‌ அடியிலோ நிற்கக்கூடாது. கான்கிரீட்‌ கூரையிலான கட்டடங்களில்‌ நிற்க வேண்டும்‌. பாதுகாப்பான கட்டடங்கள்‌ இல்லாத பட்சத்தில்‌ தாழ்வான பகுதியில்‌ சென்று இருக்கலாம்‌. இடி, மின்னலின்‌ போது, மின்சாதனங்கள்‌, கைப்பேசி, தொலைபேசியை பயன்படுத்தக்‌ கூடாது. திறந்த நிலையில்‌ உள்ள ஜன்னல்‌ மற்றும்‌ கிரில்‌ அருகில்‌ இருக்கக்‌ கூடாது.

மழையின்‌ போது வீடுகளில்‌ உள்ள சுவர்களில்‌ தண்ணீர்‌ கசிவு இருக்குமாயின்‌ அந்த பகுதியில்‌ மின்‌ கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில்‌ மின்சாரம்‌ உபயோகிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்‌. காற்று மற்றும்‌ மழை காரணமாக மரக்கிளைகள்‌ முறிந்து மின்கம்பிகளில்‌ விழுந்தால்‌ பொதுமக்கள்‌ அவற்றை வெட்டி அப்புறப்படுத்த முயற்சிக்கக்‌ கூடாது.

மேலும் படிக்க:Chennai Power Cut: சென்னையின் முக்கியமான பகுதிகளில் இன்று மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க.!

பச்சை மரங்கள்‌ மின்சாரத்தை கடத்தும்‌ தன்மை உடையதால்‌ மின்கம்பிகளுக்கு அருகில்‌ உள்ள மரங்களை வெட்டும்‌ போது மரக்கிளைகள்‌ மின்கம்பியில்‌ பட்டு மரம்‌ வெட்டும்‌ நபருக்கு மின்‌ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில்‌ உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும்‌.

மின்தடை தொடர்பான புகார்களுக்கும்‌, இயற்கை இடர்பாடுகளின்போது அவசரகால உதவிக்கும்‌, மின்விநியோகம்‌ சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும்‌ 'மின்னகம்‌' மின்‌ நுகர்வோர்‌ சேவை மையத்தினை 94987-94987 என்ற எண்ணில்‌ 24 மணி நேரமும்‌ தொடர்பு கொள்ளலாம்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!