சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

By Manikanda PrabuFirst Published Jan 3, 2024, 3:44 PM IST
Highlights

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Latest Videos

உண்மை வென்றது: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற கவுதம் அதானி!

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், பொன்முடி, அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக பொன்முடியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்திருந்த நிலையில், பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பத்து வயது சிறுமிக்கு சீன நிமோனியா பாதிப்பு!

முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி இழந்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)இன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே, குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!