தற்கொலைக்கு காரணமே நீங்கள் தான் என கேஸ் போடுவோம்... பிரதீபாவின் பெற்றோரை மிரட்டிய போலிஸ்!

First Published Jun 6, 2018, 11:47 AM IST
Highlights
police officers threatened the parents of the girl who did suicide


நீட் தேர்வினால் இன்னுமொரு இளம் உயிர் தமிழகத்தில் பலியாகி இருக்கிறது. விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா எனும் மாணவி, நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம், தமிழக மக்களை தற்போது மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்ற பிரதீபா, அந்த மாவட்டத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். அதனை தொடர்ந்து அவரை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கின்றனர் அவரது பெற்றோர். கட்டிடத்தொழிலாளியான பிரதீபாவின் தந்தை, தனது மகளின் கனவு நிறைவேற வேண்டும் என்ற ஆசையில் கஷ்டப்பட்டு, அவரை படிக்க வைத்திருக்கிறார். பிரதீபா பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதால், அவரை பாராட்டி அப்பகுதி ஆட்சியர் கொடுத்த பரிசு தொகையும் அவரது படிப்பிற்கு உதவியது.

12ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் பெற்ற பிரதீபா, நீட் தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால் அவர் பெற்றிருந்த மதிப்பெண்களுக்கு தனியார் கல்லூரியில் தான் இடம் கிடைத்திருக்கிறது. தனியார் கல்லூரியில் கல்வி பயிலும் அளவிற்கு பணவசதி இல்லாத காரணத்தால் பிரதீபா, மீண்டும் நீட் தேர்விற்கு முயற்சி செய்திருக்கிறார். அதில் இந்த முறை அவர் தோல்வி அடைந்திருக்கிறார். இந்த விவரத்தை அவரது வீட்டில் யாரும் பிரதீபாவிடம் தெரிவிக்கவில்லை. தானாக இது குறித்து தெரிந்து கொண்ட பிரதீபா,  எலிமருந்தை குடித்து தற்கொலை செய்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே “ நீட் தேர்வில் தவறான மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்த கேள்விகளுக்கு, மதிப்பெண் வழங்கும் படியும் அரசிடம் மனு செய்திருந்தார்”. இந்த ஆண்டாவது தனது கனவு படிப்பை படித்திடலாம் என காத்திருந்த இவர், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ மஸ்தான் (திமுக), விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள், அதிமுகவின் தினகரன் அணியினர், போன்றோர் மருத்துவமனையின் முன்பு  பிரதீபாவின்  இழப்பிற்கு நியாயம் வழங்குமாறு, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள்  நீட் தேர்வு தடை செய்ய வேண்டும், பிரதீபா குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பிரதீபா குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். என மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அப்பகுதி கலெக்டரிடம் கொடுத்தனர்.

அதன் பிறகு போலீசார் அங்கிருந்த கூட்டத்தை கலைத்துவிட்டு, பிரதீபாவின் பெற்றோரை தனியே அழைத்து சென்று, பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கையெழுத்து வாங்கினர். வருத்தத்தில் இருந்த அவர்களிடம் இப்போது கையெழுத்து போடவில்லை என்றால், இந்த தற்கொலைக்கு காரணமே நீங்கள் தான் என்று கேஸ் போட்டு விடுவோம். என்று மிரட்டி தான் இந்த கையெழுத்தை வாங்கி இருக்கின்றனர் போலீசார். மகளை இழந்து வருத்தத்தில் இருந்த அவர்களிடம், காவல் துறையினர் நடந்து கொண்ட விதம், அவர்களுடைய வருத்தத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

click me!