ஏற்கனவே சைதாபேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் அடிப்படையில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.
குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம்,திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.
இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.
ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்ட நான்குபேர் மீதும் பிரிவுகள் 143 ( அனுமதியின்றி கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் கூடுதல்), 148(கலகம் விளைவிக்கும் நோக்குடன்,உயிருக்கு அச்சுருத்தல் விளைவிக்கும் வகையில் ஆயுதங்களை எடுத்துவருதல்), 188(அரசு அலுவலர் உத்தரவுக்கு அடிபடிய மறுத்தல்), 506(2) (கொலைமிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திலும், எழும்பூர் காவல் நிலையத்திலும் பிரிவு 143 , 188 , 285 கீழ் உள்ள வழக்குகள் அடிப்படையில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அருண்குமார் மீது கோவையில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் அதை திரட்டி வருவதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.