
திருநெல்வேலி
திருநெல்வேலியில், மனைவியுடன் சண்டைபோட்டு மனமுடைந்த போலீஸ் ஏட்டு காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் அல்போன்ஸ் (45). இவர் தனது மனைவி, இரண்டு மகன்களுடன் பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தில் வசித்து வருகிறார்.
கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். அதேபோன்று, கடந்த 8-ஆம் தேதியும் இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் அல்போன்ஸ் காவல் நிலையத்துக்கு சென்றுவிட்டார். அங்கும் அவரது மனைவி வந்து தகராறு செய்தாராம்.
இதனால் மனம் நொந்துபோன அல்போன்ஸ் காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை காவலாளர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி, ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் விசாரணை நடத்தி, தனது அறிக்கையை காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாரிடம் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து காவல் ஏட்டு அல்போன்சை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேற்று அதிரடி உத்தரவிட்டார்.
காவல் நிலைய வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.