ஏரிகளை உடனே புனரமைக்க வலியுறுத்தி 17-ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் - விவசாய சங்கம் முடிவு...

First Published May 11, 2018, 7:00 AM IST
Highlights
Demonstration in Thiruchi on 17th - urging immediate resumption of lakes


திருச்சி

தமிழகத்தில் உள்ள ஏரிகளை உடனே புனரமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிற 17-ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விவசாய சங்க மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைப்பெற்றது. இதற்கு மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார், 

மாநில துணை செயலாளர் சுப்பிரமணி, துணைத்தலைவர் சிவசாமி சேர்வை, துணை அமைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் உலகநாதன் வரவேற்று பேசினார்.

மாநில செயற்குழுவில் எடுத்த முடிவுகள் குறித்து தலைவர் பூ.விசுவநாதன் பேசியது: "தமிழகத்தில் 2065 ஏரிகளை புனரமைக்க ரூ.300 கோடி அரசு அறிவித்தது. ஆனால், அதை செயல்படுத்த முன்வரவில்லை. 

எனவே ஏரிகள் புனரமைக்கும் பணிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் பாசன வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 17-ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஆணையமும் உச்ச நீதிமன்றம் விதித்த கால கெடுவுக்குள் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், கர்நாடக அரசு வழங்க வேண்டிய பாக்கி 65 டி.எம்.சி. தண்ணீரை குறுவை சாகுபடிக்கு மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.55 ஆதரவு விலை வழங்க ரூ.1540 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. எனவே, அதனை உடனே வழங்க வேண்டும். 

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை, பெரம்பலூர் மாவட்டம் சின்னமுட்லு அணைத்திட்டம், கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை ஆழப்படுத்தவும், விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாறு கிளை வாய்க்கால் தூர்வாருதல், 

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம், நாகை மாவட்டத்தில் குமாரமங்கலம் ஆதனூர் தடுப்பணை, கரூர் மாவட்டம் பெரிய தாதம்பாளையம் ஏரி தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பரமசிவம், ராமலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் லால்குடி ராமலிங்கம், பெரியசாமி, சண்முகவேல், தர்மலிங்கம், அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.  கூட்டத்தின் முடிவில் மாவட்ட அமைப்பாளர் அ.சுப்பிரமணியன் நன்றித் தெரிவித்தார். 

click me!