
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சென்னை மெரினாவில் போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதனிடையே போலீசார் மாணவர்களை நோக்கி ‘போராடுற மூஞ்சிகளா இது’ என கிண்டல் அடித்துள்ளனர். இதனால் போராடுவதற்கு என்று தனியாக முகம் உள்ளதா என போலீசாருக்கு மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் , நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 80 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உரிமை மீட்பு குழு , ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம் இணைத்து ஏராளமானோர் புதுக்கோட்டை திலகர் திடலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இளைஞர்கள் மாணவர்கள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெடுவாசலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையாக போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
12 நாளாக நடக்கும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர், இயக்குனர் கவுதமன் காவல்நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கைதான மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள் போலீசார் மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை வைத்தனர்.
தங்களுக்கு மாணவர்கள் என்ற மரியாதையே கொடுக்கவில்லை எனவும், இனி போராடவே கூடாது என்ற மனநிலையை உருவாக்கும் நிலையில், போலீசார் தரக்குறைவாக பேசியதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், போலீசார் மாணவர்களை நோக்கி ‘போராடுற மூஞ்சிகளா இது’ என கிண்டல் அடித்ததாகவும், ‘போராடுவதற்கு என்று தனியாக முகம் உள்ளதா’ எனவும் போலீசாருக்கு மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.