
நவீன துப்பாக்கிகளை கடத்தி வந்த கும்பல் ஒன்று, ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தப்பியோட முயன்ற நிலையில், சினிமா பாணியில் போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் கள்ளத் துப்பாக்கிகள் கடத்தப்பட்டு வருவதாக சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவல் கிடைத்ததை அடுத்து, சென்னை, வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமார் தலைமையில், போலீசார் ரயிலில் ஏறி துப்பாக்கி கடத்தல் கும்பலைப் பிடிக்க திட்டமிட்டனர்.
போலீசார் வருகையை அறிந்து கொண்ட கடத்தல் கும்பல், ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து கீழே குதித்து தப்பியோடியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத போலீசார், தப்பியோடியவர்களை துரத்தினர். துப்பாக்கி முனையில் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், செல்போன்கள் மற்றும் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து துப்பாக்கிகள் கடத்த முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், கமல் என்பது தெரியவந்தது.
துப்பாக்கி கடத்தல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் வருவதைப்போல், கடத்தல்காரர்களை போலீசார் பிடித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி கடத்த முயன்றது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலர் துப்பாக்கிகளைக் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அவர்களை நாங்கள் பின்தொடர்ந்தோம். பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் துப்பாக்கி கடத்தல்காரர்களைப் பிடிக்க திட்டமிட்டோம். ஆனால் எங்களைப் பார்த்ததும் திருவொற்றியூரில் இறங்கிய கடத்தல் கும்பல், ஓடத் தொடங்கியது.
கடத்தல்காரர்களிடம் இருந்து 5 நவீன ரக பிஸ்டல்கள், தோட்டாக்கள், 2 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மீது வழக்கு உள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.