
சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமகவின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, ''வரும் டிசம்பர் 17ம் தேதி வன்னியர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். 234 தொகுதிகளிலும் இந்த போராட்டம் நடைபெறும்.
டிசம்பர் 17ம் தேதி லட்சக்கணக்கான தொண்டர்கள் கைதாகி சிறைக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் போராட்டம் வெல்லும். போராட்டத்தின்போது எந்த ஒரு சிறிய பிரச்சனை கூட நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்காக பாமக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி, ''என் வாழ்க்கை முழுவதும் கட்சிக்கும், அய்யாவுக்கும் தான் உழைத்தேன். இனியும் தொடர்ந்து உழைப்பேன். மாம்பழம் சின்னத்தை பயன்படுத்தும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் நமக்கு வழங்கியுள்ளது. ஆகவே யார் நீதிமன்றம் சென்றாலும் மாம்பழம் சின்னத்தை நம்மிடம் இருந்து பறிக்க முடியாது'' என்று தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறுகையில், ''பாமக ஆலோசனைக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் பணிகளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? சட்டப்பேரவை தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
விளம்பர மாடல் அரசு
சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என பொய் சொல்கிறார். ஆட்சி முடியும்போது திட்டங்களை அவசரம் அவரசமாக அறிவிக்கிறது விளம்பர மாடல் அரசு. இந்த திட்டங்களை ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறிவித்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரி செய்வது தான் SIR பணிகள். ஆனால் இதில் பாஜக சதி செய்வதாக திமுக குற்றம்சாட்டுகிறது. திமுக தான் ஏமாற்றும். திமுகவை யாரும் ஏமாற்ற முடியாது'' என்றார்.