
பிரதமர் மோடி தொடர்புகொண்டு தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வந்ததைத் தொடர்ந்து, இன்று முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி மீண்டும் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"பிரதமர் மோடி, மிக்ஜம் புயலின் தாக்கம் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க என்னை அழைத்துப் பேசினார்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
"பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதும், மாநில அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவருக்கு விளக்கிக் கூறி, மத்திய அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோரினேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த இரட்டை பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்த பிரதமர், வெள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தாக முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கான நிதி கோரிய முதல்வர் ஸ்டாலின், நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடியும் நிரந்தரத் தீர்வுக்காக ரூ.12,659 கோடியும் வழங்குமாறு கோரியுள்ளார். மேலும், தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.2000 நிதியை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தினார்.
முட்டை பிரியர்களுக்கு ஷாக்! வரலாறு காணாத உச்சம் தொட்ட கொள்முதல் விலை!