புதுக்கோட்டை
புதுக்கோட்டை இரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டம், இரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமைத் தாங்கினார். மாவட்டச் செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில், "நடைமேடையில் மாற்றுத் திறனாளிகள் சென்றுவர லிஃப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக பயணச் சீட்டு பெறும் இடம் ஒதுக்க வேண்டும்.
சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்க வேண்டும்,
வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் வேண்டும்,
பேட்டரி கார் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்,
புதுக்கோட்டையில் இருந்து மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாகனத்தை கூட்ஸ் இரயிலில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்திற்கு பிறகு இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை புதுக்கோட்டை இரயில் நிலைய மேலாளரிடம் அச்சங்கத்தினர் கொடுத்தனர்.
மாற்றுத் திறனாளிகளின் இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.