பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து பெட்ரோல் பங்க் ஸ்ட்ரைக் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவ்வபோது பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வந்தன.
இதைதொடர்ந்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நாளை மறுநாள் முதல், தினசரி விலை நிர்ணயிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
நாள்தோறும் விலை நிர்ணயம் என்பது இரவு 12 மணிமுதல் அமலுக்கு வருவது வழக்கம்.
தற்போது, பெட்ரோல் பங்க்கில் ஐந்து நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருப்பு வைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
தினசரி பெட்ரோல் விலை நிர்ணயிக்கும் போது, விலை உயர்வு அல்லது குறையும் போது, பங்க் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கபடுவார்கள்.
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்புக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும், விலை நிர்ணயத்தை நள்ளிரவுக்கு பதிலாக காலை 6 மணிக்கு மாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதைதொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்நிலையில், விலை நிர்ணயத்தை நள்ளிரவுக்கு பதிலாக காலை 6 மணிக்கு மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.