
கிருஷ்ணகிரி,
அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றால் ஆட்டோக்களை பறிமுதல் செய்யாமல் சம்பவ இடத்திலேயே அபாரதம் கட்ட ஆவணம் செய்ய வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி ஆட்டோ சங்க தலைவர் சிவக்குமார், குருபரப்பள்ளி ஆட்டோ சங்கத் தலைவர் முனிரத்தினம், துணைத் தலைவர் மாதையன் ஆகியோரது தலைமையில் திங்கள்கிழமை சுமார் 100–க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
“நாங்கள் மாத தவணையில் கடன் வாங்கி ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறோம். இந்த நிலையில் கடந்த ஐந்து மாத காலமாக ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, அதிக பயணிகளை ஏற்றுகிறோம் என்று கூறி கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆட்டோக்களை பறிமுதல் செய்து விடுகின்றனர்.
அதன் பிறகு 20 ரூபாய் பத்திரத்தில் ஒரு உறுதிமொழி எழுதி கொடுக்கும்படி கூறி ஆட்டோவை விடுவிக்கின்றனர். இது போல் கடந்த 5 மாதத்தில் 20–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் 3 மாதம் வரை ஆட்டோவிற்கு தவணை கட்டமுடியாமல் போய் விட்டது.
கடன் கொடுத்தவர்கள் ஆட்டோக்களை எடுத்துச் சென்று விடுகின்றனர். இதனால் இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ள நாங்களும், எங்களை நம்பியுள்ள எங்கள் குடும்பத்தினரும் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளோம்.
எனவே, ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றால் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்யும் போதே, அதற்கு உண்டான அபராத தொகையை நிர்ணயம் செய்து, உடனடியாக ஆட்டோவை விடுவிக்க ஆவண செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.