தஞ்சாவூர்
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பா.ஜ.க-வின் கொடியை கொளுத்த முயன்ற திராவிடர் கழகத்தினர் 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் தலைமை வகித்தார். இதில் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மண்டலச் செயலாளர் ஐயனார், மண்டலத் தலைவர் ஜெயராமன், மண்டல இளைஞரணிச் செயலாளர் வெற்றிக்குமார், பேச்சாளர் பெரியார்செல்வன், நகரத் தலைவர் நரேந்திரன், செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பெரியார் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், தமிழகத்தில் ராம ரத யாத்திரைக்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
தி.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தி.க.வைச் சேர்ந்த சிலர் பழைய நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. கொடிக் கம்பத்தில் இருந்த கொடியை பிடுங்கி தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். இதனைப் பார்த்த பாதுகாப்புக்கு நின்ற காவலாளர்கள் விரைந்து சென்று கொடியை பிடுங்கினர். மேலும், கொடியை பிடுங்கி வந்த நால்வரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது தி.க.வினருக்கும், காவலாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவலாளர்கள் அழைத்துச் சென்ற நால்வரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துவர வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து காவலாளர்கள் நால்வரையும் மறியல் நடந்த இடத்துக்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உள்பட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.