"முட்டையில் ஊழல் இல்லை" - கமல் குற்றச்சாட்டுக்கு பெரம்பலூர் ஆட்சியர் மறுப்பு!!

First Published Aug 1, 2017, 5:23 PM IST
Highlights
perambalur collector refused kamal complaint


பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி ஒன்றில், வழங்கப்பட்ட முட்டைகள் தரமானது என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா கூறியுள்ளார். 

அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக கமல் ரசிகர்கள் கூறியதை அடுத்து ஆட்சியர் சாந்தா, அங்கன்வாடியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டதாக நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

இதன் காரணமாக கமலுக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர், அமைச்சர்கள் என கமல் ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், அதற்கு கமல் ஹாசன் பதில் தெரிவிப்பதும் நடந்து வருகிறது.

பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது

— Kamal Haasan (@ikamalhaasan) August 1, 2017

ஊழல் குறித்து பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது என்றும் அதிமுகவினரும், ஊழலை அம்பலப்படுத்துமாறு தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார் கமல். இதையடுத்து, கமல் ஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர், தங்களின் அரசியல் செயல்பாடுகளைத் தொடங்கினர்.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்பட்டதாக கமல் ஹாசன் ரசிகர் நற்பணி மன்றத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கன்வாடி மையத்தில் அவர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, அழுகிய சத்துணவு முட்டை வழங்குவதைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அவர்கள், இந்த விஷயத்தை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக சத்துணவு முட்டையில் உள்ள ஊழலை நற்பணி இயக்கத்தினர் தடுத்து நிறுத்தியதாக நடிகர் கமல் ஹாசன் புகார் தெரிவித்தார். 

இந்த நிலையில், ஜூலை 24 ஆம் தேதி அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட முட்டைகள் தரமானது என்று பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல் ஹாசன் ரசிகர்கள் புகார் கூறியதை அடுத்து, ஆட்சியர் சாந்தா, பெரம்பலூர் முத்துநகர் அங்கன்வாடியில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு பேசிய ஆட்சியர் சாந்தா, குழந்தைகளுக்கு தரமான முட்டைகளே வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

click me!