
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் அவர்களை தடுத்து நிறுத்த காவலாளர்கள் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை தி்ட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 44 இலட்சம் மதிப்பில் குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு அரசு திட்டமிட்டு இதற்கான ஒப்பந்தம் அளித்துள்ளது.
இந்தப் பணியை நகராட்சி மூலம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. "இந்த குப்பைக் கிடங்கை கடற்கரையில் அமைக்கக் கூடாது" என்று ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கடந்த ஒரு வார காலமாக தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், கட்டுமானப்பணியை தடுத்து நிறுத்துதல், பணி செய்ய விடாமல் அங்கேயே காத்திருக்கும் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று குப்பை கிடங்கு அமைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. அங்கு பணிகள் நடைபெறுவதை அறிந்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம மக்கள் ஒன்று கூடினர்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆகியோர் குப்பைக் கிடங்கு அமைக்கும் இடத்திற்கு பணியை தடுத்து நிறுத்துவதற்காக வந்தனர்.
இதனையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். மீனவ கிராம மக்கள் அங்கு திரண்டு வந்ததும் அங்கு பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த காவலாளர்கள், கிராம மக்களை தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், "பணிகளை நிறுத்த வேண்டும்" என்று முழங்கினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களில் சிலர் குழிதோண்டும் பணியை நிறுத்துவதற்காக ஓடினர். காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது காவலாளர்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பிறகே கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திட்டத்தை அரசு கைவிடா விட்டால் அனைத்து பகுதி மீனவர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் எச்சரித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.