இலங்கைக்கு திரும்பி செல்ல விருப்பமில்லை - மத்திய குழுவிடம் பெரம்பலூர் அகதிகள் முகாமில் இருந்த மக்கள் திட்டவட்டம்...

First Published Jan 10, 2018, 9:59 AM IST
Highlights
People do not want to go back to Sri Lanka - People Guidance at the Perambalur refugee camp central committee ...


பெரம்பலூர்

இலங்கைக்கு திரும்பிச் செல்ல தங்களுக்கு விருப்பம் இல்லை என பெரம்பலூரில் உள்ள, இலங்கை அகதிகள் மத்தியக் குழுவினரிடம் தெரிவித்தனர்.  

பெரம்பலூர் மாவட்டம், புறநகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமில், 78 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் வசித்து வருகின்றனர்.

இந்த பெரம்பலூர் அகதிகள் முகாமில், மத்திய அரசின் உள் விவகாரத் துறை சார்பு செயலர்கள் எஸ்.கே. பரிடா, ரித்திஷ் குமார், அகதிகள் மறுவாழ்வு துறையின் இந்திய அரசு சார்பு செயலர் சுப்ரமணியன், தமிழ்நாடு அகதிகள் மறு வாழ்வு துறை இயக்குநரின் நேரடி உதவியாளர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, கழிவறை வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்தியக் குழுவினரிடம், முகாமில் வசிப்போர் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவிப்போர், விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று மத்தியக் குழுவினர் தெரிவித்தனர்.

ஆனால், "இலங்கைக்கு செல்ல தங்களுக்கு விருப்பம் இல்லை" என்று அகதிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தெரிவித்தனர்.

இலங்கைக்கு செல்ல யாருமே விருப்பம் தெரிவிக்காததை  கண்டு மத்திய குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த ஆய்வின்போது, பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகர்சாமி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் த. பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

click me!