“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவது மக்கள் விரோதம்” – நீதிமன்றத்தில் முழக்கமிட்ட மாவோயிஸ்டுகள்…

First Published Mar 1, 2017, 10:24 AM IST
Highlights
People against hydrocarbon execution of the project chanted in court Maoists


“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவது மக்கள் விரோதம்” என்று மாவோயிஸ்டுகள் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் முழக்கங்களை எழுப்பி நீதிமன்றத்தை அதிரவைத்தனர்.

மாவோயிஸ்டு ரூபேஸ் என்கிற ரூபன் (40). அவருடைய மனைவி சைனா (35), அனுப் மேத்யூ ஜார்ஜ் (40), கண்ணன் (39), வீரமணி (42) ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கியூ பிரிவு காவலாளர்கள், மாவோயிஸ்டுகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டு குறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியுள்ளனர் என்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்த புகார்களின் பேரில் ரூபேஸ், சைனா, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோர் மீது கோட்டூர் காவலாளர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று மாவோயிஸ்டுகள் சைனா, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் வேனில் பொள்ளாச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மாஜிஸ்திரேட்டு ஹரிகரன் முன்னிலையில் மூன்று பேரையும் சமர்ப்பித்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இதுதொடர்பான விசாரணை வருகிற 14–ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இதேபோன்று போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதாக மற்றொரு வழக்கு ரூபேஸ் மீது பொள்ளாச்சி தாலுகா காவலாளர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ரூபேஸ் வேறொரு வழக்கில் கேரளாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் பொள்ளாச்சி நீதிமன்றத்திற்கு வந்த மாவோயிஸ்டுகள் அனுப் மேத்யூ ஜார்ஜ், சைனா ஆகியோர் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும், “இந்த திட்டத்தை நிறைவேற்றுவது மக்கள் விரோதம்” என்று கூறி முழக்கமிட்டதால் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

click me!