திண்டுக்கல்
கொடைக்கானலில் வன உயிரின சரணாலயம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களோடு அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் வன அலுவலகத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை வன உயிரின சரணாலயமாக மாற்றுவதற்கு விவசாயிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் மாவட்ட வன அலுவலகத்தில் வன உயிரின சரணாலயம் திட்டம் தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட வன அலுவலர் தேஜேஸ்வி, "கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் அமையும் இடத்தையும், சுற்றுச்சூழல் உணர்வு மண்டலத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோடை விழா முடிந்ததும் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வன உயிரின சரணாலய திட்டத்தை எதிர்க்கும் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன்சிவக்குமார், கீஸ் அமைப்பைச் சேர்ந்த மோகன், வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த மைக்கேல், பழனிமலை கூட்டமைப்பினர், வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த ராஜா முகமது உள்ளிட்டோர் கூறியது:
"இத்திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர். அதுவரை கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினர்.
இந்தக் கூட்டத்தில் டி.எஸ்.பி. பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.