
அப்பா, அம்மா, கடவுளைத் தவிர வேறு யார் காலிலும் விழாதீர்கள் என்றும், பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ அவசியம் இல்லை என்றும் தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை, இன்று 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். இன்றைய சந்திப்பில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்க்ல மாவட்ட ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.
அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், மதுரை என்றால் வீரத்துக்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருந்தபோது, அர்ச்சகர் என்னிடம், என்ன நட்சத்திரம் என்று கேட்டார். எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் எதுவுமே தெரியாது. அப்போது எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகுதான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் என்று கூறினார்.
மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால், ராகவேந்திரா மண்டபம், சைவம் என்பதால் வேறு இடத்தில் அசைவ விருந்து படைத்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன் என்றார்.
உங்களது உற்சாகத்தையும், உணர்ச்சியையும், உங்களையும் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. நானும் உங்களது வயதைத் தாண்டி வந்தவன்தான். சிறுவயதில் பெங்களூருவில் இருந்தபோது, நடிகர் ராஜ்குமாரின் பெரிய ரசிகனாக இருந்தேன். கர்நாடகாவை பொருத்தவரை சிவாஜி, எம்.ஜி.ஆர். சேரந்த கலவைதான் ராஜ்குமார்.
ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். நாம் மூன்று பேர் காலில்தான் விழா வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலி மட்டுமே விழா வேண்டும் என்றார். அடுத்ததாக பெரியவர்களின் காலில் விழ வேண்டும். வாழ்க்கை என்கிற பாதை கஷ்டங்கள், துன்பங்கள், சோகங்கள், சோதனைகள் நிறைந்தது. அந்த பாதையை கடந்து வந்தவர்கள் பெரியவர்கள். நாமும் அதில் நடந்து
வரப்போகிறோம். எனவே அவர்கள் காலில் விழ வேண்டும். மற்றபடி பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ அவசியம் இல்லை என்று ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் அறிவுறுத்தினார்.