பழனி முருகன் கோயில் சிலை மோசடி - ஸ்தபதி மற்றும் முன்னாள் செயல் அலுவலரின் ஜாமீன் மனு தள்ளுபடி... 

First Published Apr 21, 2018, 8:01 AM IST
Highlights
Palani Murugan temple idol scam - former executive officer and sthabathi petition dismissed


தஞ்சாவூர்
 
பழனி முருகன் கோயிலுக்கு சிலை செய்ததில் மோசடி செய்து கைதான ஸ்தபதி மற்றும் முன்னாள் செயல் அலுவலர் ஜாமீன் மனுவை தள்ளுபடி தஞ்சாவூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் நவபாஷான சிலையை கர்ப்பகிரகத்தில் இருந்து அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய ஐம்பொன் சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. 

இந்த சிலை சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சிற்ப கலைக்கூடத்தில் ஸ்தபதி முத்தையா மேற்பார்வையில் செய்யப்பட்டது.

இந்த சிலையில் தங்கத்திற்கு பதிலாக வேறு உலோகத்தை சேர்த்து ரூ.1 கோடியே 31 இலட்சம் மோசடி நடைபெற்றதால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளார்கள் வழக்குப்பதிந்து ஸ்தபதி முத்தையாவையும், குற்றம் நடந்தபோது பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜாவையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஸ்தபதி முத்தையாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கைதான இருவரும் ஜாமீன் கேட்டு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞரும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 

நேற்று மாலை ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது "ஸ்தபதி முத்தையா, கே.கே.ராஜா ஆகிய இருவருடைய ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி நக்கீரன்.

click me!