
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 15ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் குப்பை மற்றும் ஓட்டல் கழிவுகளை அள்ளும் வாகனத்தில் உணவு பொட்டலங்கள் கொண்டு விநியோகம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளன. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தூய்மை பணியாளர்களை இழிவுப்படுத்துவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர். இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
போட்டோஷூட் நடத்திய பொம்மை முதல்வர்
மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
தூய்மை பணியாளர்களை இழிவுப்படுத்திய அரசு
ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.