தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்..! தேர்வை ஒத்திவைக்க வேண்டும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Sep 18, 2022, 9:27 AM IST
Highlights

காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

குழந்தைகளை தாக்கும் காய்ச்சல்

தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார் . இது த்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், “ப்ளூ" வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்தக் காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளி விடுமுறையா ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன புது தகவல்

காய்ச்சல்- கட்டுப்பாடுகள் அவசியம்

பொதுவாக, "ப்ளூ" காய்ச்சல் என்பது சளி இருமலுடன் கூடியதாக இருக்கும் என்றும் இதில் ஒருவருக்கு வந்தால், அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் வரும் என்றும்; பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரும்போது அந்தப் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரவும் வாய்ப்பு உருவாகும் இருதய பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும்; கொரோனா தொற்று ஏற்பட்டபோது எந்த அளவுக்கு கவனமாக இருந்தமோ அந்த அளவுக்கு கவனமாக இருப்பது அவசியம் என்றும்; 60-வயதிற்கு மேற்பட்டோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இதிலும் மூச்சுத் திணறல் வரும் வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், மேலும், “ப்ளூ” காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட வேண்டுமென்றால் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரோ அல்லது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும்,

குழந்தைகளுக்கு வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு இன்றுமுதல் விடுமுறை அறிவிப்பு..

பள்ளிகளுக்கு வர கட்டாயம்

பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தொடர் காய்ச்சல் இருப்போர் தாங்களாகவே முன்வந்து ரத்த பரிசோதனை செய்து அதற்குத் தேவையான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமென்றும், மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். "ப்ளூ" காய்ச்சல் மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்ற இந்தச் சூழ்நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களினையே ஏற்படுத்தவும்; இதனைத் தடுப்பதற்குத் தேவையான மருந்துகளை பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக வழங்கவும்;

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தக் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, "ப்ளூ" காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், 'சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்' என்பதற்கேற்ப, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

திருக்குவளை சமஸ்தான கொத்தடிமை ஆர்.எஸ்.பாரதிக்கு நாவடக்கம் தேவை..! இறங்கி அடித்த ஜெயக்குமார்

click me!