
OPS condemns criticism of Anna : மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட கழக மூத்த தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் பெரியாரை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும், அந்த விழா மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார். செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இது அதிமுக- பாஜக கூட்டணிக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே அண்ணா மற்றும் ஜெயலலிதாவை பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை விமர்சித்திருந்ததால் கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் மீண்டும் அண்ணாவை விமர்சித்த வீடியோ ஒளிபரப்பானது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவும் அதிமுகவின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தது. 'அண்ணா' பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார். செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர். அண்ணாவைக் கேவலப்படுத்துவதை 'அண்ணா' என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? என கேள்வி எழுப்பியது. அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள் என விமர்சித்திருந்தது. இந்த சம்பவத்தையடுத்து அதிமுகவினர் மாநாட்டில் அண்ணாவை விமர்சித்து வெளியான வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி, தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை அமைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைத் தொடர்ந்து, போறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் மதிக்கப்பட்ட போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர்.
நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான். தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.