தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வரும் என்றும், அதில் போட்டியிட தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்குமாறும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
இதன் முதல் கூட்டம் காஞ்சீபுரம் மாவட்டம் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமை தாங்கினார். ஆலந்தூர் பகுதி செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். ஓபிஎஸ், மதுசூதனன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.
அதிமுக யாருடைய குடும்பத்துக்கும் சென்றுவிடாமல் பாதுகாக்க வேண்டம் என்றும்,, தொண்டர்கள் யாருடைய வீட்டு வாசலுக்கும் சென்று நிற்கவேண்டிய சூழ்நிலை வரக்கூடாது என்றும் தெரிவித்தார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த தேர்தல் முதலில் வருகிறது, எந்த தேர்தல் பிந்தி வருகிறது என்ற நிலையே உள்ளதாக ஓபிஎஸ் கூறினார். முதலில் உள்ளாட்சி தேர்தல் தான் வரும் என்று நினைத்தோம். ஆனால் சட்டமன்ற தேர்தல் தான் வர இருக்கிறது. இங்கே இருக்கும் தொண்டர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.