
வாக்காளர் இறுதி பட்டியல் பணி முடிவடையவாததால், ஜூலை இறுதிக்கு பின்னரே, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடியவில்லை. அனைத்து பணிகளும் முடிந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் அணையம் தெரிவித்தது. இதனை ஏற்று கொண்ட நீதிமன்றம் ஜூலை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஜூலை இறுதிக்கு பிறகே முடிவெடுக்கப்படும். தற்போது வாக்காளர் இறுதி பட்டியல் பணி முடிவடையவில்லை. பணி முடிந்ததும், அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை, நீதிமன்றம் ஒத்தி வைத்தது.