திருமணம் செய்ய மறுத்த உறவினரை ஆம்னி வேனால் மோதி கொன்றவர் கைது...

First Published Apr 26, 2018, 6:58 AM IST
Highlights
omni van hits and killed a relative who refused to marry


சிவகங்கை 

சிவகங்கையில் தனது அண்ணன் மகளை திருமணம் செய்ய மறுத்தவரை ஆம்னி வேனால் மோதி கொன்றவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பிலாமிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ராமச்சந்திரன் (29). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். தற்போது ஊரில் வேலை செய்து வருகிறார். 

அதே ஊரைச் சேர்ந்தவரும், அவரது உறவினருமான மாசிலாமணி (38) என்பவர் தன்னுடைய அண்ணன் மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு ராமச்சந்திரனை கேட்டுள்ளார். ஆனால், ராமச்சந்திரன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் மாசிலாமணி தொடர்ந்து ராமச்சந்திரனை வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிலாமிச்சம்பட்டியில் இருந்து கல்லல் நோக்கி ராமச்சந்திரன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் ஆம்னி வேனில் மாசிலாமணி வந்துள்ளார். 

கல்லல் அருகே நடராஜபுரம் பகுதியில் சென்றபோது, மாசிலாமணி ஆம்னி வேனால் ராமச்சந்திரன் மீது வேகமாக மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமச்சந்திரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்தச் சம்பவம் குறித்து கல்லல் காவலாளர்கள் கொலை வழக்காக பதிவு செய்து மாசிலாமணியை கைது செய்தனர். பின்னர் அவர் சிவகங்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டார். 

click me!