
மூதாட்டியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு, 25 சவரன் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச் சம்பவம், திருப்பூர் மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்திஉள்ளது.
திருப்பூர், இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் பாலாமணி (58). இவரது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலர் விஜயகுமார், பாலாமணியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஊட்டிக்கு சென்று விட்டனர். பாலாமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் பின்பக்க கதவு வழியாக மர்மநபர்கள், உள்ளே புகுந்தனர். அப்போது, சத்தம்கேட்டு பாலாமணி எழுந்து சென்றார். அங்கு மர்மநபர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அலறி கூச்சலிட்டார். இதனால், பயந்துபோன மர்மநபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாமணியை சரமாரியாக குத்தினர்.
இதில், அவரது வயிறு, குரல்வளை உள்பட உடல் முழுவதும் 8 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் பாலாமணி சாய்ந்தார். இதையடுத்து மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த, 25 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று காலை வேலைக்கு வந்த தோட்டக்காரர் நாராயணசாமி, பாலாமணி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து போலீசார் சம்ப இடத்துக்கு வந்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்த மர்மநபர்களின் ரேகைகளை, பதிவு செய்தனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், பாலாமணியின் வீடு, விவசாய நிலத்துக்கு நடுவில் உள்ளது. அருகே, அட்டை தொழிற்சாலை, கோழி பண்ணை ஆகியவை உள்ளது. காம்பவுண்ட் சுவரை ஒட்டி, 7 வாடகை வீடுகள் உள்ளன. அட்டை கம்பெனி, கோழிப்பண்ணை, தென்னந்தோப்பு பகுதிகளையும் சேர்த்து, 16 இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மர்மநபர்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், மானிட்டரை கழற்றி சென்றதால், அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.