இன்னும் 12 மணி நேரத்துக்கு வெளுத்து வாங்கப்போகுது கன மழை !! 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் !!!

First Published Dec 1, 2017, 6:35 AM IST
Highlights
ogi strom...next 12 hours heavy rain announcement for south districts


கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக் கடலில் உருவான ‘ஒகி’  புயல் மேலும் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 12 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்ட கடலோர பகுதியில் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது

நேற்று அது மீண்டும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது. அதற்கு ‘ஒகி’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

ஒகி புயல் தீவிரமடைந்துள்ளதால்  திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, கடலுார் மாவட்டங்களில், மிக கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கான அவசர எண்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1077, 04652231077, 9442480028 மற்றும் 9445008139 ஆகிய எண்களில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையின் பல பகுதிகளில் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பழங்காநத்தம், காளவாசல், சிம்மக்கல், ஆரப்பாளையம், பெரியார், தெற்குவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய,விடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில், மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில், திருவனந்தபுரம், ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, பத்தனந்திட்டா மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயல், லட்சத்தீவில் மையம் கொண்ட பின் கடலிலேயே வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 'கடல் சூழல் சாதகமாக இருந்தால், வட கிழக்காக கோவா, மும்பை கடற்கரை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும்' என, அமெரிக்காவின் சர்வதேச புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

 

 

click me!