
சிலைக்கடத்தலில் சிக்கிய சிலைகளை கோடிக்கணக்கில் விற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து விளக்கம் அளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் காவலர் எழுதிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில்,அருப்பு கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் பணியின் போது 8 சிலைகள் கிடைத்துள்ளது. இதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் பல கோடி ரூபாய்க்கு சிலைகளை விற்றுள்ளனர்.
இது குறித்து இவர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல, சிலைகளை விற்ற காவல் ஆய்வாளர் காதர் பாட்ஷா தற்போது டி.எஸ்.பி யாகவும்,சுப்புராஜ் ஆய்வாளரகாவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனால் இவர்கள் மீதான வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என கேட்டிருந்தார் .
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மனு குறித்து விளக்கமளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஜூன் 29ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தார்.