
கன்னியாகுமரி
கோடை வெயிலின் தாக்கம் காட்டுத்தனமாக இருப்பதால், வழக்கத்தைவிட அதிகமாக தண்ணீர் குடிங்கள்! என்று ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் மக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தினமும் பருகும் குடிநீரை விட கூடுதலாக குடிநீர் பருக வேண்டும்.
இரவு நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து இருக்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்ளலாம்.
கால்நடைகளை கொட்டகையில் வைத்து பாரமரித்துக் கொள்ள வேண்டும்.
உடுத்தும் ஆடைகள் மிக எடை குறைந்த, வெளிர் நிறங்களில், தளர்வாக உள்ள பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வெளியில் செல்லும் போது “கூலிங்கிளாஸ்“, குடைகள், ‘ஷூ` மற்றும் காலணிகள் அணிந்து செல்ல வேண்டும்.
அவசியமாக பணி நிமித்தமாக வெளியில் செல்லும்போது ஈரமான துணியினை தலை, கழுத்து, முகம் மற்றும் மூட்டுகளில் படும்படியாக போட்டுக் கொண்டு வெளியில் செல்ல வேண்டும்.
டீ, காபி, கார்போ ஐட்ரேட் குளிர்பானங்கள் ஆகியவற்றினை தவிர்த்திட வேண்டும்.
ஓ.ஆர்.எஸ். பவுடர், லெசி, நீராகாரம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், மோர் மற்றும் இதர வெயிலுக்கு ஏற்ற பானங்களை அவ்வப்போது பருகி வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம்.
உடல் மிகவும் சோர்வுறுதல் மற்றும் இதர வெயில் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெற வேண்டும்” என்று ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவுறுத்தி உள்ளார்.