மதுரை
நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றக் கோரிய வழக்கில் கன்னியாகுமரி ஆட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையின் அருகில் நெடுஞ்சாலையின் நடுவே கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர் விஜயகுமார் ஜெயலலிதாவின் உருவத்தை மணல் சிற்பமாக அமைத்தார். அந்த சிற்பமானது சுற்றிலும் தடுப்புகள் வைத்தும், கூரை அமைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மாநில நெடுஞ்சாலையின் நடுவில் ஜெயலலிதா மணல் சிற்பம் அமைந்து உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே, அந்த மணல் சிற்பத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த 22.2.2017 அன்று புகார் மனு அனுப்பினேன்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மனுவை பரிசீலித்து ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து கன்னியாகுமரி ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வருகிற 28–ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.