
தென் மேற்கு பருவ மழை முடிவடைந்து, இன்று முதல் வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. பல தென் மாவட்டங்களில் இன்று அதிகாலையிலேயே மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை சீசனில் நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்மேற்கு பருவமழை காலம் நேற்றுடன் நிறைவடைந்து, வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கி இருப்பதால் , தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
இந்நிலையில் . தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதற்கு அடையாளமாக விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் ஆண்டு மழைபொழிவில் 48 சதவீதம் மழையை தமிழகம் பெறுகிறது. அதாவது, இந்த காலத்தில் தமிழகம் 44 செ.மீ. மழை பெறுகிறது.
தமிழகத்தில் கடந்த 2015–ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பான அளவை விட அந்த ஆண்டு 53 சதவீதம் அதிகமாக மழை பெய்தது.
ஆனால் 2016–ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது. இதனால் தமிழகம் அந்த ஆண்டு ஏமாற்றத்தை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .