
நாகப்பட்டினம்
மணல்மேட்டில் உள்ள கிராமத்தில் குடிநீர், சாலை வசதிகள் இல்லாததால் அவதிப்படும் மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மணல்மேடு அருகே சேத்தூர் ஊராட்சியில் உள்ள உடையூர் பருத்திக்குடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக இந்தக் கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக நிலத்தடிநீர் மட்டம் மிகவும் குறைந்து குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக வெகு தொலைவு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கிராமத்திற்குச் செல்லும் சாலை சேதமடைந்து இருப்பதால் பயணம் மிகவும் சிரமம் தான்.
இதுகுறித்து உடையூர் பருத்திக்குடி கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த கிராம மக்கள் நேற்று மணல்மேடு அருகே சேத்தூர் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “தட்டுப்பாடின்றி உடனே குடிநீர் வழங்க வேண்டும், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்” என முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை தாசில்தார் காந்திமதி மற்றும் மணல்மேடு காவலாளர்கள் விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், “விரைவில் மக்கள் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டது.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுக் கலைந்து செல்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தை பெரியளவில் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.
இந்தப் போராட்டத்தால் சீர்காழி - மணல்மேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.